Thursday 24 January 2013

11, 12ம் வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம்: பிப்., 13ல் வெளியீடு



                          அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத் திட்டங்களை மாற்றி, அவ்வப்போதைய கால கட்டத்திற்கு
ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தற்போதுள்ள பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எனவே, வரலாறு, அறிவியல், தொழில்துறை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், புதிய பாடத் திட்டங்களை உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. பாட வாரியாக, தனித்தனி நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டில், முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
                              
ஒவ்வொரு குழுவிற்கும், பல்வேறு பல்கலைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் தலைமையில், தலா மூன்று, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என, ஆறு பேர், உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த குழுக்களுக்கும், ஓய்வுபெற்ற சென்னை ..டி., பேராசிரியர் நாகபூஷணராவ், தலைவராக உள்ளார். இக்குழு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், 24 பாடங்களுக்கு, தற்காலிக வரைவு பாடத் திட்டத்தை தயாரித்து முடித்துள்ளது.
பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்து, இதுகுறித்து கருத்து கேட்கும் கூட்டங்கள், வரும் 30, 31 தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் நடக்கின்றன. முதல் நாள், செய்முறைத் தேர்வு பாடங்களுக்கான கருத்துக் கேட்பும், மறுநாள், செய்முறைத் தேர்வு அல்லாத பாடங்களுக்கு கருத்துக்களை கேட்டறிய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
                இதன் அடிப்படையில், பிப்., 13ல், துறை இணையதளத்தில் (www.tnscert.org) வரைவு பாடத் திட்டத்தை வெளியிட்டு, 27ம் தேதி வரை, மீண்டும் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், அதன்பின் வரைவு பாடத் திட்டத்தை இறுதி செய்து, அரசின் அனுமதிக்கு அனுப்பப்படும் என்றும், துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. அடுத்த கல்வி ஆண்டில் (2014-15), பிளஸ் 1 வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16), பிளஸ் 2 வகுப்பிற்கும், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் ஆகின்றன. குழுவின் தலைவர் நாகபூஷணராவ் கூறியதாவது: ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பாடத் திட்டங்கள், தேசிய அளவில், உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள் உட்பட, பல்வேறு பாடத் திட்டங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில், உயர்கல்வி மற்றும் தொழில்துறைக்கு தேவையான தரமான பாடத் திட்டங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ளவர்களும், வரைவு பாடத் திட்டத்தின் மீது கருத்துக்களை தெரிவிக்கலாம். சமச்சீர் கல்வி திட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, அதிகமான கருத்துக்கள் வந்தன; மேல்நிலை கல்வி பாடத் திட்டத்திற்கும், அதிகமான கருத்துக்கள் வரும் என, எதிர்பார்க்கிறோம். தரமான கருத்துக்களை சேர்த்து, வரைவு பாடத் திட்டத்தை இறுதி செய்வோம். அரசின் ஒப்புதலுக்குப் பின், பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அச்சடிக்க வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
.

No comments:

Post a Comment