Friday 26 April 2013

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு சார்பான கருத்துக்களை நிபுணர் குழுவிடம் தெரிவிக்க கால அவகாசம் கோரி பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை



             பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் உரிமைக்காகவும் பட்டதாரி ஆசிரியர்களின் நன்மைக்காகவும் எப்போதும் ஓங்கி உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி
மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு...அண்ணாமலை அவர்கள் வெளிட்டுள்ள மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) அவர்களுக்கு அனுப்பி உள்ள கடித விபரம் வருமாறு: மேற்கண்ட தங்கள் அலுவலக ..எண் கொண்ட கடிதத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு சார்பான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் 25.04.2013 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதை இன்னும் கால நீட்டிப்பு செய்து வழங்குமாறு எங்கள் சங்கத்தின் சார்பாக பணிந்து கேட்டுக் கொள்கிறேன். பள்ளிக் கல்வி துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் என்பது Tamilnadu School Education Service சார்ந்த பணியிடம் ஆகும். இது உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடம் ஆகும், இதை எக்காரணம் கொண்டும் Tamilnadu Higher Secondary Education Service சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது என்று தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குவதால் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எவ்வித பணப் பலனும் இல்லை. எனவே மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் விகிதாச்சாரம் ஒதுக்கிட எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .
                           மேலும் 1978ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி துவங்கப்பட்ட போது நிபுணர் குழுவால் ஆராயப்பட்டு அரசானை எண் 528 நாள் 31.12.1997-ன் படி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 50%மும் , மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 25%மும் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கலாம் என்று ஆணை இடப்பட்டுள்ளது, அனால் அதன் பின் தன்னிச்சையாக அரசாணை எண்.155 நாள் 03.07.2009-ன் மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40%மும் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35%மும் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு ஒதுக்கி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது . இது சுமார் எண்பதாயிரம் (80000) பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டது . பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த நாளை கணக்கில் கொண்டு தான் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். மேலும் இது சார்ந்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் இது வரை சரியான தகவல் வந்து சேராததால் இது சார்ந்த கருத்துக்களை நிபுணர் குழுவிடம் தெரிவிப்பதற்கு ஜூன் மாதம் பள்ளி திறந்து 10 நாட்கள் கழித்து அதாவது 15.06.2013 வரை கால அவகாசம் அளித்து உதவுமாறும், மேலும் எங்கள் கழகம் அரசு அங்கீகாரம் பெற்ற பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களை உள்ளடக்கிய கழகமாகும். எனவே இது சம்பந்தமான கருத்துக்களை தெரிவிக்க எங்கள் சங்கத்தையும் அழைத்து பேசுமாறு தங்களை மீண்டும் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். (இது தொடர்பான ஆலோசனைகளை உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் இவர்களிடம் மட்டுமே கோரப்பட்டுள்ளது).

No comments:

Post a Comment