Saturday 27 April 2013

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்



                         "செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் தினமும் படித்து வந்தால் சிந்தனை திறன் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிப்பால் செயல்திறன் கூடும்," என்று உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் கூறினார். அன்னூர் கிளை நூலகம் மற்றும் சொக்கம்பாளையம் கிளை
நூலகம் சார்பில், 91 துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் உலக புத்தக நாள் விழா நடந்தது. அன்னூர் தெற்கு துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், கல்விக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து, பள்ளியில் படிக்கும் 55 மாணவர்கள் அன்னூர் கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு, தலா ரூ. 20 வீதம் ரூ. 1,100 வைப்புத் தொகையை நூலகர் விஜயாவிடம் வழங்கினார்.
                              
உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் பேசுகையில், "புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டால், சிந்தனை அதிகரிக்கும். செயல்திறன் கூடும். மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகத்திற்கு செல்ல வேண்டும். தினமும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும்," என்றார். வடக்குப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ராணி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். விழாவில் பலர் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலர்களாக இணைந்தனர். "நூலகம் சிறப்பாக செயல்பட, பொதுமக்கள் அதிக அளவில் புரவலராக சேர முன்வர வேண்டும்," என, நூலகர் விஜயா கோரிக்கை விடுத்தார். புத்தகம் வாசித்த மாணவர்களில் சிலர், புத்தகத்தில் தாங்கள் படித்த கதையை விழாவில் கூறினர்
.

No comments:

Post a Comment