Sunday 28 April 2013

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை



             அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது. இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர
திட்டமிட்டுள்ளது. அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள், ஜாதி சங்கம், அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்க கூடாது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருக்க கூடாது. அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது போன்ற பல நிபந்தனைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. எனினும் அரசு ஊழியர்கள் பலர் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்து மறைமுக அரசியல்வாதிகளாகவே உள்ளனர். சிலர் தங்கள் மனைவி, மகன், மகள் பெயரில் அரசு துறை கான்டிராக்ட்களையும் எடுத்து செய்கின்றனர்.
                                    
சிலர் அரசியல் சார்புடையவர்களாக இருக்கின்றனர். அரசு துறைகளில் பணியாற்றி கொண்டு நேரம் வரும் போது திடீரென பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ ஆகிவிடுகின்றனர். இதுபோல அரசு ஊழியர்கள் பலர் தங்களது பணிகளை ராஜினாமா செய்து விட்டு முழு நேர அரசியல்வாதிகளாகி உள்ளனர். இதுபோல் திடீரென அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்யும் போது, சம்பந்தப்பட்ட துறையில் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. அவருக்கு பதில் வேறு ஊழியரை உடனடியாக நியமிப்பதும் இல்லை. இதனால் பல துறைகளில் காலி இடங்கள் உள்ளன.
                                 
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசு ஊழியர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு உடனடியாக அரசியல் கட்சிகளில் சேர்ந்தால், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வரவுள்ளது. இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரையில், அரசு துறையில் ஓய்வு பெற்றவர்கள் அரசியல் கட்சிகளிலோ, இயக்கங்களிலோ சேர்ந்து பணியாற்றுவது அவரவர் விருப்பம். ஆனால், அதிகாரி, ஊழியர்கள் திடீரென்று பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் கட்சிகளில் சேர்ந்து பொது தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் போட்டிடுவதை தடை செய்ய வேண்டும் கூறப்பட்டுள்ளது.
                             
இந்த பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் உள்ளது. அதற்கு முன்பு இதற்கான சட்ட திருத்தத்தை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதா அல்லது அவசர சட்டமே உடனடியாக பிறப்பித்துவிட்டு பின்னர் நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதா என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது
.

No comments:

Post a Comment