Tuesday 30 April 2013

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு



                       அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஓர்
அரசாணையில், அரசு மருத்துவமனைகளில் விலியர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வில் அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களோடு, தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
                                
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தமிழக அரசின் அந்த அரசாணை செல்லாது என்று கூறி, அதனை ரத்து செய்துள்ளார். அரசுக் கல்லூரிகளில் பயிலும் செவிலியர்களுக்காக மக்களின் பணத்தை அரசு பெருமளவு செலவு செய்கிறது. மக்கள் பணத்தில் பயின்று செவிலியர்களாக தகுதி பெற்ற அவர்களின் சேவை மக்களுக்கு திரும்பக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆகவே, அந்த செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட வேண்டும். தங்களின் சொந்த செலவில் தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள், அரசுப் பணத்தில் அரசுக் கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு இணையாக தங்களையும் கருத வேண்டும் என்று கோருவதை ஏற்க இயலாது. இதே போன்று வேறொரு வழக்கில் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை சற்றும் கவனத்தில் கொள்ளாமலேயே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் பெறுவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இது உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு முரணாக உள்ளதால், அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ராமசுப்பிரமணியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்
.

No comments:

Post a Comment