Tuesday 14 May 2013

மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 2013 - ஓர் முன்னோட்டப் பார்வை



                பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை பொது மாறுதலுக்கான அரசாணை வழக்கம் போல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசாணையைக் கொண்டு இயக்குநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை
வகுத்தளித்துள்ளனர்.


1. மாறுதல் விண்ணப்ப மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு முறை என்பதால் ஆசிரியர் மாறுதல் கோரும் பள்ளியை விண்ணப்பத்தில் குறிப்பிடக் கூடாது என்று அரசாணை (பத்தி-8) திடமாகக் குறிப்பிடுகிறது. ஆனால் விண்ணப்ப மாதிரியில் ஆசிரியர் மாறுதல் பெற விரும்பும் பள்ளிகளை விருப்ப வரிசைப்படி அதிகபட்சம் (மூன்று பள்ளிகள்) குறிப்பிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. கணவர்/மனைவி பணியில் உள்ளதைச் சிறப்பு முன்னுரிமையாகக் கோருவோர்க்குக் கணவர்/மனைவி பணிபுரியும் மாவட்டத்திற்கு மட்டுமே இம்முன்னுரிமை பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே தொலைவில் பணிபுரியும் ஆசிரியத் தம்பதியினர் அருகருகே பணிபுரியலாம் என்ற குடும்பநலன் கருதி இச்சலுகையை அரசு வழங்குகிறது. ஆனால் ஒருவர் விழுப்புரத்திலும் மற்றொருவர் நாகப்பட்டினத்திலும் பணிபுரியும் பட்சத்தில் விழுப்புரத்தில் பணிபுரிபவர் நாகப்பட்டினத்தில் காலிப்பணியிடம் இல்லையெனில் இச்சலுகையைப் பயன்படுத்தி அருகிலுள்ள திருநெல்வேலிக்கோ கன்னியாகுமரிக்கோ மாறுதல் கோர முடியாது. அரசு இதனைக் கருணையோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

3.
பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் உத்தேசம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய முதல் சுற்றுக் கலந்தாய்வில் காலியாகும் இடங்களுக்கு (மலைப்பாங்கான / தொலைதூரத்தில் உள்ள /ஆசிரியர்கள் சென்றுவரச் சிரமம் மிகுந்த இடமாக இருந்தாலும்) மூத்த ஆசிரியர்களும் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்பு நடைபெறும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் காலியாகும் இடங்கள் (போக்குவரத்து வசதி நிறைந்த நகர்ப்புறப் பள்ளியானாலும்) இளைய ஆசிரியர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

4.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதலில் தொடங்கி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் வரை முறையான வரிசையில் கலந்தாய்வு நடப்பதால் இக்கல்வியாண்டின் இடையில் தலைமையாசிரியரோ பிறவகை ஆசிரியர்களோ பதவியிறக்கம் செய்யப்படுவதற்கோ திடீரெனப் பதவியுயர்வு பெறுவதற்கோ சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம்.

5.
நடுநிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு அலகு மாறுதல் கோரலாம் என்பது போல் விண்ணப்பத்தில் வினாப்பட்டி உள்ளது. ஆனால் அரசாணையிலோ வழிகாட்டு நெறிமுறைகளிலோ இதுபற்றி ஏதும் குறிப்பிடவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான இதனை அரசு செவிமடுத்துப் பரிசீலிக்க வேண்டும்.

6.
உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் அரசாணையையும் வெளியிட்டு, சார்ந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களையும் கலந்தாய்வுக்கு வரவழைத்து அவர்களின் விருப்புரிமையின்படி (தாய்த்துறை/ அயற்துறை) உத்தரவுகளை வழங்கிய பின் பிற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை நடத்தினால் பின்னர் ஏற்படவிருக்கும் குழப்பங்கள் இப்போதே தவிர்க்கப்படலாம்.

7.
மாறுதல் முன்னுரிமைப் பட்டியல் (Priority List) சில ஒன்றியங்களில் முன்கூட்டியே தயாரிக்காமல் கலந்தாய்வுக் கூடத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களைப் பொறுத்து அவ்வப்போது அவசர அவசரமாகத் தயாரிப்பதால் கலந்தாய்வில் காலதாமதமும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. இது போலவே குறிப்பிட்ட ஒன்றியத்திற்கு / மாவட்டத்திற்கு மாறுதல் கோரும் ஆசிரியர்களின் மாறுதல் முன்னுரிமைப் பட்டியலையும் காலிப்பணியிடங்களின் பட்டியலையும் கலந்தாய்வுக்கு முன் வெளியிட்டால் மாறுதல் கோருவோர் தாங்கள் விரும்பும் இடம் கிடைக்குமா என்பதைத் தோராயமாகத் தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும். மதிப்புமிகு இயக்குநர் அவர்கள் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.

8.
கலந்தாய்வில் யாருக்கு முன்னுரிமை உண்டு என்ற கருத்து வேறுபாடுகளால் தான் பெரும்பான்மையான கலந்தாய்வுக் கூடங்களில் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகின்றன. "Aவும் Bயும் ஓரே நாளில் பணியில் சேர்ந்தவர்கள். மொத்தப் பணிக்காலமும் பணியிட முன்னுரிமையும் (Station Seniority) இருவருக்கும் சமம். A பிறந்த தேதியின் படி மூத்தவர், B தன் கணவர்/மனைவி பணியில் உள்ள சான்றிதழைக் கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் ஒரே இடத்திற்காகப் போட்டியிட்டால் யாருக்கு வழங்குவது?" என்பன போன்ற சந்தேகங்களைத் தெளிவிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறை விதிகள் மாநிலம் முழுதும் சீராக வழங்கப்பட வேண்டும்.

9.
கைக்குழந்தையுடன் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், போக்குவரத்து வன்முறைகள் காரணமாக வெளிமாவட்டத்திலிருந்து வரச் சிரமப்படுபவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஆன்லைன் முறையைத் தொடக்கக் கல்வித் துறையிலும் அறிவித்து அதுவும் எந்த மாவட்டத் தலைநகரில் வேண்டுமானாலும் கலந்து கொள்ள ஆவன செய்யப்பட வேண்டும்.

10.
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தெடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு மாறுதல் பெறத் தகுதி வாய்ந்த தேர்ந்தோர் பட்டியல் 1.1.2013ன் படி வெளியிட்டு அதனைக கொண்டு கலந்தாய்வினைத் தொடங்கினால் கல்வியாண்டின் இடையில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் தவிர்க்கப்படும்
.

No comments:

Post a Comment