Sunday 12 May 2013

பிளஸ் 2 விடைத்தாள் மறு கூட்டல்: ஆன்-லைன் முறையால் தவிப்பு



            பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்ற முறையால், கிராமப்புற மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்வதற்கான
காலக்கெடுவை, மேலும் சில தினங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்குwww.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில், மாணவர்கள், தங்களது விவரங்களை பூர்த்தி செய்ததும், 10 இலக்க விண்ணப்ப எண் அடங்கிய ஒப்புகை சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், இந்த, 10 இலக்க எண்ணை, குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டது.
                         ஆனால், பலர் இதை செய்யத் தவறியுள்ளனர். மேலும், வங்கியில், கட்டணம் செலுத்துவதற்கான செலானை பதிவிறக்கம் செய்யவும் தவறி உள்ளனர். இது போன்ற தவறை செய்த மாணவர்கள்,dgehelpline@gmail.com எனும் முகவரிக்கு, -மெயில் அனுப்பி, தவறை சரி செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், 044-28203089, 044-28221734 ஆகிய எண்களுக்கு, பேக்ஸ் மூலமாகவும், 044-28278286, 044-28264513 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு, தேவையான விவரங்களை பெறலாம் எனவும், தெரிவித்துள்ளது.
                           கூடுதல் கால அவகாசம் தேவை: தேர்வு முடிவு வெளியான, 9ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அனைத்து திட்டங்களையும், ஒரே நேரத்தில், இணையதளத்திற்கு மாற்றியதால், கிராமப்புற மாணவர்கள், பெரிதும் தவித்து வருகின்றனர். அனைத்து வேலைகளுக்கும், "வெப் சென்டர்"களை தேடி ஓடும் நிலை உள்ளது. இணையதளம் வழியாகவே, பல்வேறு பதிவுகளை செய்ய வலியுறுத்தும் தேர்வுத் துறை, அந்த திட்டங்கள் குறித்து, மாணவர்களிடையே, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.  மாறாக, திடீர் திடீரென, பல திட்டங்களை, இணையதளத்திற்கு மாற்றி வருகிறது. மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற பதிவு செய்ய, ஒரே இணையதளத்தை, பல லட்சம் மாணவர்கள் முற்றுகையிட்டதால், நேற்று முன்தினம், சில மணி நேரம், இணையதளம் இயங்கவில்லை. நேற்றும், இந்த பிரச்னை நிலவியதாகக் கூறப்படுகிறது. எனவே, இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய, மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது, மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment