Thursday 2 May 2013

6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்



               தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி பயிலும், ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, ஒரே மாதிரியான புத்தக பைகள், ஜாமின்ட்ரி பாக்ஸ், வண்ண பென்சில், புவியியல் படங்கள் உட்பட, 13 விதமான பொருட்களை, நடப்பு கல்வியாண்டில் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதில், ஆறு முதல், எஸ்.எஸ்.எல்.ஸி., வரை கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, 35 ரூபாய் மதிப்பில், இரண்டு கல்வியாண்டுக்கு பயன்படுத்தும் வகையில், "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு கல்வியாண்டிலும், 6, 8, எஸ்.எஸ்.எல்.ஸி., ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஜாமின்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதன் மூலம் தமிழகத்தில், 48 லட்சத்து, 1,572 மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர்.
                        
தமிழகத்தில் உள்ள, 14 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு உடனடியாக, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க, அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு, பள்ளி கல்வி இயக்குனர் ராஜராஜேஸ்வரி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பினார். இதற்காக மாவட்டம் வாரியாக தேவைப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில், "ஜாமின்ட்ரி பாக்ஸ்" கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள அக்சரா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நொய்டா, அபிலசா கமர்சியல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இருந்து மொத்தமாக, "ஜாமின்ட்ரி பாக்ஸ்கள்" கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், 1.09 லட்சம், கிருஷ்ணகிரி, 1.18 லட்சம், நாமக்கல், 88,866, ஈரோடு, 1.16 லட்சம், கோவை, 1.48 லட்சம், திருப்பூர், 1.25 லட்சம், நீலகிரி, 39,876, திண்டுக்கல், 1.46 லட்சம், மதுரை, 1.92 லட்சம், சென்னை (தெற்கு), 20,132 என, மொத்தம், பத்து மாவட்டத்துக்கு, 11.04 லட்சம் ஜாமின்ட்ரி பாக்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
                          
இதேபோல், நொய்டா அபிலாஷ் கமர்சியல் (பி) லிமிடெட் நிறுவனம் மூலம் திருவண்ணாமலைக்கு, 1.61 லட்சம், கடலூர், 1.76 லட்சம், தஞ்சாவூர், 1.63 லட்சம், திருவாரூர், 90,630 என இரு நிறுவனத்தையும் சேர்த்து மொத்தம், 16. 95 லட்சம், "ஜாமின்ட்ரி பாக்ஸ்கள்" கொள்முதல் செய்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டம் வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஜாமின்ட்ரி பாக்சில், 15 செ.மீ., அளவுள்ள ஸ்கேல், இரு மூலை மட்டம், 180 டிகிரியில் பாகைமானி, கவராயம் (காம்பஸ்), பிரித்தல் மானி (டிவைடர்), பென்சில், திருகி (சார்ப்னர்), அழிப்பான் (ரப்பர்) உள்ளிட்ட ஒன்பது கணித உபகரணங்கள் அங்கியுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த பின், கல்வித்துறையின் உத்தரவுக்கு பின் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது
.

No comments:

Post a Comment