Wednesday 1 May 2013

பயிற்சிகளுக்காக வசூலிக்கும் கட்டணத்தை கல்விக் கட்டணமாகக் கருத இயலாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு



                                  விளையாட்டு போன்ற பாடத் திட்டத்தோடு தொடர்பில்லாத செயல்பாடுகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை கல்விக் கட்டணமாக கருத இயலாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே இது போன்ற
கட்டண விவகாரத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலையிட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. விளையாட்டு, இசை, நடனம் போன்ற பாடத் திட்டத்தோடு தொடர்பில்லாத சில செயல்பாடுகளுக்காக தங்கள் பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து சென்னை திருவொற்றியூரில் உள்ள கவிபாரதி வித்யாலயா பள்ளி சுற்றறிக்கைகளை வெளியிட்டது.
                                      
இது தொடர்பாக பெற்றோர்கள் சிலர் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கவிபாரதி வித்யாலயா பள்ளி வெளியிட்ட சுற்றறிக்கைகள் சட்டப்படி செல்லாது என உத்தரவிட்டது. கல்விக் கட்டண நிர்ணயக் குழு பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.ரவிச்சந்திர பாபு ஆகியோர் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
                             
இசை, நடனம், விளையாட்டு, யோகா பயிற்சிகள் போன்றவை பாடத் திட்டத்தோடு தொடர்பில்லாத கூடுதல் செயல்பாடுகள். பள்ளி நேரத்துக்கு முன்பாகவோ அல்லது பள்ளி முடிந்த பிறகுதான் இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுபோன்ற பயிற்சிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை கல்விக் கட்டணமாகக் கருத இயலாது. ஆகவே, விளையாட்டு போன்ற பாடத் திட்டம் சாராத செயல்பாடுகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான விவகாரத்தில் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலையிட முடியாது. அதே நேரத்தில் கல்வித் திட்டம் சாராத பயிற்சிகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பெற்றோர் கருதினால் அது குறித்து சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் முறையிட பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என்று நீதிபதிகள் அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளனர்
.

No comments:

Post a Comment