Thursday 9 May 2013

வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே செய்ய ஏற்பாடு


                          மேல் நிலை வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளி வளாகங்களிலேயே  இணையதளம் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இணையதளம் மூலமாக  பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் வேலைவாய்ப்பு பதிவை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்வதற்கு கடந்த 2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வழிவகை செய்யப்பட்டுள்ளது இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து மேற்கொண்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ, மாணவியர் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பதினைந்து நாட்களுக்கு ஒரே தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
               வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்யாமல் பன்னிரெண்டாம் வகுப்புக் கல்வித் தகுதியை முதல் முறையாக  பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்ப அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்மேலும், தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி   செய்து   கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை  உடன் எடுத்துச் செல்ல வேண்டும். கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதனையொட்டி ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம்  ஏற்படும் கூட்ட நெரிசல், காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்ப்பதற்காக பள்ளிகளின் வாயிலாகவே துறையின் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் +2 கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment