Thursday 16 May 2013

இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு - நாளிதழ் செய்தி



               பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் ஆன்-லைன் கவுன்சிலிங் பணிகளுக்கு சென்று விடுவதால் மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கையெழுத்து பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்திற்குள்/ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்கள் தனித்தனியாக வெப்சைட்டில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்படுகிறது. மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் நேற்று முன்தினம் முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
                                  
ஆனால் சென்னை தலைமையிடத்தில் கம்ப்யூட்டர் சர்வர் இயங்காத சூழ்நிலையில் ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று காலையில் பதிவு பணிகள் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பிரதிநிதிகள் வரிசையில் காத்திருந்து இப்பதிவு பணிகளை மேற்கொண்டனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனியாகவும் இப்பதிவு பணிகள் நடந்தது. இதற்கிடையில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் மேற்படிப்புகளை தொடர பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இதுவரை வராத நிலையில், கம்ப்யூட்டர் சான்றிதழில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் "அட்டெஸ்ட்" பெற வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வராத சூழ்நிலையில் மாணவ, மாணவிகள் இந்த கையெழுத்து பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
                                
இதனால் மேற்படிப்புகளுக்கு குறித்த காலத்தில் இவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அலைக்கழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கியமான தற்போதைய காலத்தில் பணிக்கு வராத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகள் விரும்புகின்றனர்
.

No comments:

Post a Comment