Tuesday 7 May 2013

ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி



           அரசு பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்கும் வகையில், ஆங்கில வழிக் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. ஆங்கில மோகத்தால், கிராமப்புற பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை. சில ஆண்டுகளாகவே, 50 சதவீதத்துக்கும் மேலாக
குறைந்துள்ளது. லாகல், காத்தாகுளம், கீழச்சாக்குளம், கண்டிலான், ஏனாதி, கிடாத்திருக்கை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 15க்கும் குறைவாகவும், தனியார் பள்ளிகளில் சேர்க்கை கணிசமாகவும் அதிகரித்துள்ளது. லாகல் துவக்க பள்ளியில் மாணவர்கள் இல்லாததால், மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், கிராமப்புற பள்ளிகள் மூடுவிழா கண்டு, ஆரம்ப கல்விக்காக மாணவர்கள் பல கி.மீ., தூரம் செல்லும் அவலம் ஏற்படும்.
                                
கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கொளுந்துரை, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளிகள், செல்வநாயகபுரம், கீழக்கன்னிசேரி, கீழத்தூவல், காக்கூர் துவக்கப்பள்ளிகளில் 20 மாணவர்கள் இருந்தால், இந்த கல்வியாண்டில் இருந்து, முதலாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைபடுத்தப்பட உள்ளது. முதுகுளத்தூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி சூசைதாஸ் கூறுகையில், "அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நோக்கில், மாணவர்களின் சேர்க்கையை வைத்து, முதல் வகுப்பிலிருந்து, ஆங்கில வழி கல்வியை இந்த கல்வியாண்டு முதல், குறிப்பிட்ட பள்ளிகளில் நடைமுறைபடுத்த உள்ளோம். எல்.கே.ஜி., யூ.கே.ஜி., குழந்தைகள், அங்கன்வாடி மைய பொறுப்பில் உள்ளதால், அம்மாணவர்களுக்கு அக்கல்வியை வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றார்
.

No comments:

Post a Comment