Saturday 4 May 2013

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்



                        தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம், தமிழ்நாடு
இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இசக்கியப்பன் கூறியதாவது: தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். 2004ம் ஆண்டு முதல் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மாதம் 4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டதால் ஏற்கனவே பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திய பின்புதான் புதியதாக நியமிக்கப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். ஆனால் அப்படி செய்யாததால் ஒரே பணி இரு வேறு ஊதிய விகிதம் என்ற நிலையில் உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
                               எனவே, இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி தர்ணா, உண்ணாவிரத போராட்டம், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதில் 10ம் தேதி நடக்கும் மானிய கோரிக்கைக்கு முன்பாக நல்ல தீர்வு காணப்படும் என்றார். எனவே, பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசுஉதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாறள்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இல்லையெனில் இதுசம்பந்தமாக மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாநில பொது செயலாளர் கூறினார்.

No comments:

Post a Comment