Tuesday 14 May 2013

மார்க் ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்: மாணவர்களுக்கு முதல்பட்டதாரி சான்று



           ப்ளஸ் 2 முடித்த மாணவர்களில், முதல் பட்டதாரி சான்றுக்காக, வரும், 27ம் தேதி வழங்கப்படும் மதிப்பெண் சான்றுக்காக காத்திருக்க வேண்டியதில்லை, என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் சார்பில்,
வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மாணவர்கள், உயர்கல்வி படிப்பதில் பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காக, ப்ளஸ் 2 படிப்பு முடித்து, குடும்பத்தின் முதல்பட்டதாரி மாணவனுக்கு கல்வி உதவித்தொகையாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மாணவர்கள் உயர்கல்வி நிறுவனத்தில் படிக்கும்போது, அவர்களின் கல்விக் கட்டணத்தில் இருந்து அரசின் உதவித்தொகை குறைத்துக் கொள்ளப்படும். கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இத்திட்டத்தினால், ஏராளமான ஏழை, எளிய முதல்பட்டதாரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
                                  
கல்வி உதவித் தொகையைப் பெற, ஜாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், முதல் பட்டதாரி விண்ணப்பத்தில், தந்தை வழி பெற்றோர்கள், தாய்வழி பெற்றோர்கள், உடன் பிறந்தோர் தொழில் மற்றும் படிப்பு, நோட்டரி பப்ளிக்கிடம் இருந்து அபிடவிட் எனப்படும் உறுதிமொழி சான்று, ப்ளஸ் 2 மார்க் ஷீட் நகல் ஆகியவை இணைக்க வேண்டும். வி..., ஆர்.., தாசில்தார் ஆகியோரின் விசாரணைக்கு பின்னர், முதல்பட்டதாரி சான்று வழங்கப்படும். கடந்த கல்வியாண்டில், தேர்வு எழுதிய ப்ளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த, 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மார்க் ஷீட் வரும், 27ம் தேதி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்க் ஷீட்டுடன் முதல் பட்டதாரி சலுகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
                         
அதற்கு பதில், மாணவர்கள், ஆன்-லைன் மூலமாக பெறப்பட்ட மதிப்பெண் சான்றை, முதல்பட்டதாரி விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் வரும், 27ம் தேதி வரை காத்திருக்க வேண்டியதில்லை. இதுபற்றி வருவாய் துறை அதிகாரி கூறியதாவது: தகுதியுடைய முதல் பட்டதாரி மாணவர்கள், ஆன்லைனில் பெறப்பட்ட மதிப்பெண் சான்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். வரும், 27ம் தேதி வரை காத்திருக்காமல், சம்பந்தப்பட்ட வி...க்கள் மூலமாக சான்றுகளை பெறலாம். விண்ணப்பித்த ஒரு வாரத்தில், சான்றுகள் வழங்கப்படும், என்றார்
.

No comments:

Post a Comment