Sunday 5 May 2013

அண்ணாமலைப் பல்கலையில் கவுன்சிலிங் மூலம் அனுமதி சேர்க்கை நடத்தப்படுமா? பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பாப்பு



              தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழகஅரசு விதிமுறைகள் படி கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் அனுமதி சேர்க்கை செய்ய வேண்டும் பெற்றோர்களும், மாணவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் பணி மாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பு பதிவாளராக என்.பஞ்சநதம் நியமிக்கப்பட்டுள்ளார்பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
                             
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு (2012-13) பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு தமிழகஅரசு விதிமுறைப்படி கவுன்சிலிங் மூலம் அனுமதி சேர்க்கை நடத்தப்படாமல், மீண்டும் நுழைவுத்தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுநாள் வரை நுழைவுத்தேர்வு என்ற கண் துடைப்பின் பேரில் நன்கொடை பெற்றுக் கொண்டு அனுமதி சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் அனுமதி சேர்க்கை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பெற்றோர்களும், மாணவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
                      
மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங், பிபிடி மற்றும் பி.பார்ம் ஆகிய சுயநிதி படிப்புக்கான அறிவிப்பில் நுழைவுத்தேர்வு விண்ணப்பம் ரூ.300 எனவும்நுழைவுத்தேர்வு 7-6-2013 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளான பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பம் ரூ.400 எனவும், நுழைவுத்தேர்வு 8-6-2013 ல் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை  www.annamalaiuniversity.ac.in  என்ற முகவரியில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் என்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து படிப்பு மையங்களிலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம் எண அறிவிக்கப்பட்டுள்ளது.
                          
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகஅரசின் பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என அறிவித்து, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் அனுமதி சேர்க்கை செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகஅரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பழைய நடைமுறைப்படி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பினால் பெற்றோர்களும், மாணவர்களும் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்
.

No comments:

Post a Comment