Thursday 16 May 2013

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்டம் நிறைவேற்றம்



              அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வகைசெய்யும் சட்டமசோதா, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முக்கியமானது. கடந்த 1929ம் ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. தமிழகத்தின் பெரிய பல்கலைக்கழகமாகவும் இது விளங்கியது. ஆனால், சமீப ஆண்டுகளில், இப்பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை சரிசெய்ய அரசு சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், பல்கலையை அரசே ஏற்று நடத்த முடிவுசெய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
                               
அதன்படி, மே 16ம் தேதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், அதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கடும் நிதி நெருக்கடி காரணமாக, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தனியார் நிர்வாகத்தால் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஆசிரியர் - மாணவர்கள் நலன் கருதி, இப்பல்கலையை அரசே ஏற்று நடத்த முடிவுசெய்து, அதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்றார். பின்னர், இதுதொடர்பான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு, இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பல்லாண்டுகள் பழமைவாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது
.

No comments:

Post a Comment