Tuesday 28 May 2013

கல்வி கற்பது அடிப்படை உரிமை! இலவசமாக வழங்குவது அரசின் கடமை! - நாளிதழ் செய்தி



              தமிழக அளவில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கூட 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பெறவில்லை. மேலும் பல பள்ளிகளில் 22 முதல் 38 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்று குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் மேல்நிலை கல்விக்கு தகுதியில்லாமல் உள்ளனர். நடப்பாண்டு மட்டுமல்ல. கடந்த பல ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. மாவட்ட கல்வி அதிகாரி உள்பட பல அதிகாரிகள் இருந்தும், அரசு பள்ளிகளை கண்காணித்து, அதனை சரிசெய்ய தவறியே இதற்கு காரணம். அரசு பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணரவில்லை. ஆசிரியர்களுக்கு அதிகாரிகளும் உணர்த்தவில்லை. ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் கல்வி என்பது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம். அரசின் அடிப்படை உரிமை அப்படி இருந்தும், மிக மோசமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பல ஆயிரங்கள் சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்படுகிறது.
                                     80
சதவீத மக்கள் அரசு பள்ளிகளை நம்பி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் பள்ளி இறுதித் தேர்வில் இத்தகைய வீழ்ச்சி அடைந்தால், ஏழை எளிய மக்ககள் கல்வி கற்கும் சூழ்நிலையில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்வி காணல் நீராகவே அமையும். தரமான கல்வியை அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படுவதை உத்திரவாதப்படுத்த வேண்டும். மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று நீர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. நமது அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21-வின் படி 14 வயது வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள், அரசு பள்ளிகளின் கல்வி தரத்தில் உரிய கவனம் செலுத்துவதில்லை. கல்வி, தண்ணீர், மின்சாரம் என அனைத்தும் இப்போது தனியார் மயமாக்கப்படுகிறது. எனவே தரமான அரசுப் பள்ளிகளை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
                                  
தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் சம்பளத்தில் வேலை. அங்கு படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது எப்படி சாத்தியமாகிறது. காரணம் கொத்தடிமைகள் போல் பள்ளி முதலாளிகளை ஆசிரியர்களை பிழிந்து எடுக்கிறார்கள். ஆனால், மாதம் ரூபாய் 45 ஆயிரம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களோ வியாபாரத்தில் முதலீடு தனியார் பள்ளிகளில் பங்குதாரர், பகுதிநேரமாக தனியார் பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்துவது, கந்து வட்டி, மீட்டர் வட்டி தொழிலில் ஈடுபடுவது, டாஸ்மாக் மதுகுடித்து கும்மாளமிடுவது என பல ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை மறந்து வரம்புக்கு மீறி மோசமாக நடந்து கொள்கிறார்கள். எதிர்கால சமுதாயத் எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசியர்கள் பொறுப்பு எவ்வளவு பெரியது என்பது பற்றி துளியும் இப்படிப்பட்டவர்களுக்கு அக்கறை இல்லை.
                      
கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கு சென்று முறையாக ஆய்வு நடத்துவதில்லை. கண்காணிப்பதில்லை. அரசு கட்டிய பாலம் இடிந்து விழுந்தால், அதன் பொறியாளர் கைது செய்யப்படுகிறார். கைதி தப்பியோடினால் போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ரெயில் விபத்து நடந்தால் ரயில்வே மந்திரி ராஜினாமா செய்கிறார். ஆனôல் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி அடையாமல் போனதற்கு தமிழக அரசு யாரை கைது செய்தது. யாரை சஸ்பெண்ட் செய்தது. ஏன் செய்யவில்லை என்பதை பொதுமக்கள் கேட்க வேண்டாமா. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி வியாபாரத்தில் ஈடுபடாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உண்டா. இப்படிப்பட்டவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்காக எப்படி பாடுபடுவார்கள், குரல் கொடுப்பார்கள். எனவே பெற்றோர்களாகிய நாம்தான் களத்தில் இறங்கி போராட வேண்டும்.
                      
ஊதிய உயர்வு கேட்டு போராடும் ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த, ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க ஏன் போராட முன்வரவில்லை. தனியார் பள்ளிகள் பெருகி வரும் சூழலில் அரசுப் பள்ளிகள் முடமாக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. மருத்துவம், குடிதண்ணீர், மின்சாரம், ரேஷன் கடை போன்ற அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராடினால் அரசாங்கமானது போலீசை வைத்து அச்சுறுத்துகிறது. ஊருக்கு பஸ் விடவேண்டும். சாலைகள் சரியில்லை. ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லை. அரசு தர வேண்டிய இலவச மிக்சி, கிரைண்டர், பேன் கொடுக்கவில்லை. குடிக்க தண்ணீர் இல்லை என அனைத்து தேவைகளுக்கும் அரசை எதிர்த்து போராடுகிறோம். ஆனால், நாம் கொடுக்கும் வரிப்பணத்தை அரசு கல்விக்காக செலவழிக்கிறது. ஆனால் கல்வி தரத்தில் மாணவர்கள் முன்னேறவில்லை. முன்னேற்ற அரசு முயற்சி செய்யவில்லை. இதற்கு காரணமான ஆசிரியர்களையும், அரசுப் பள்ளிகளையும், அதிகாரிகளையும் கண்டிக்க பொதுமக்கள் முன்வருவதில்லை, இனிமேலாவது அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மக்கள் போராட வேண்டும். எனவே அதன் அடிப்படையில் கல்வி கற்பது அடிப்படை உரிமை. அதனை இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்ற கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைக்க வேண்டும் என்றனர்
.

No comments:

Post a Comment