Sunday 19 May 2013

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு



                             "மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த, தனியார் பள்ளி, பாதிக்கப் பட்டவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ரவி
என்பவர், வியாசர்பாடி, டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:கடந்த, 2007-08ம் கல்வியாண்டில், என் மகள் ரம்யா மற்றும் ஜெகன், எதிர் மனுதாரர் பள்ளியில், முறையே, மூன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படித்து வந்தனர். தண்டனை என்ற பெயரில், 2007 மார்ச், 28ம் தேதி முதல், ஏப்ரல், 4ம் தேதி வரை, ரம்யாவை, இருட்டறையில் சிறை வைத்தனர். இதுதொடர்பாக, முதல்வர் தனிப் பிரிவு, கல்வித் துறை அதிகாரி மற்றும் மனித உரிமைகள் அமைப்பில் புகார் செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்து, உதவி கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். பின், பள்ளி நிர்வாகத்துடன் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, ரம்யாவை மட்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள, ஒப்புக் கொண்டனர். அவளை பள்ளியில் அனுமதித்த பின், திடீரென பள்ளியை விட்டு வெளியேற சொன்னதுடன், மாற்றுச் சான்றிதழையும் தர மறுத்தனர்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
               மனுவை விசாரித்த, சென்னை (வடக்கு) நுகர்வோர் கோர்ட், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டை சேவை குறைபாடாக கருதி, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், மாநில நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "எதிர்மனுதாரர், தன் விருப்பப்படியே, அவரின் மகள் ரம்யாவை பள்ளியை விட்டு நிறுத்தினார். அவருக்கு, மாற்றுச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. எதிர்மனுதாரர், பள்ளி நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
              மனுவை விசாரித்த, மாநில நுகர்வோர் கோர்ட் நீதிபதி ரகுபதி, உறுப்பினர் சம்பந்தம் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு: ஜெகன், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கூறிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஆனால், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டின் உத்தரவிற்கு பிறகே, அவரின் மகள் ரம்யாவின் மாற்றுச் சான்றிதழை அளித்துள்ளனர். எனவே, மாவட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பை முற்றிலும் ரத்து செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், எதிர்மனுதாரருக்கு, 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment