Sunday 19 May 2013

நாளை ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், தென் மாவட்டங்களில் குறைந்த சீட்; அதிக போட்டி



               பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது. பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும்
சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், எந்த மாவட்டத்திலும், காலி பணியிடங்களே கிடையாது என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தென் மாவட்டங்களுக்குத் தான் ஆசிரியர்கள் அதிக அளவில் பணி மாறுதல் கேட்கின்றனர். ஆனால், அங்கு மிக சொற்ப இடங்களே காலியாக உள்ளன. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வழக்கமாக, ஜூன், ஜூலையில் நடக்கும். கல்வி ஆண்டு துவங்கிய பின், கலந்தாய்வு நடத்துவதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கிறது; அத்துடன், பணியிட மாறுதலில் கவனம் செலுத்துவதால், ஆசிரியர், சரிவர, பள்ளிகளுக்கும் செல்வதில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
                      
இதை மனதில் கொண்டு, பள்ளி திறப்பதற்கு முன்னரே, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி, நாளை (20ம் தேதி) முதல், நான்கு நாட்களுக்கு, "ஆன்-லைன்' முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு, 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, நாளை காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. முதலில், மாவட்டத்திற்குள் மாறுதல் பெறவும், பின், மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வதற்கான மாறுதலும் நடக்கும். 4,000 இடங்கள் காலி:வரும், 21ம் தேதி, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும். 22ம் தேதி, அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும். 23ம் தேதி, முதுகலை ஆசிரியர்கள் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.இதில், 4,000 காலி பணியிடங்கள் உள்ளன.
                                 
அனைத்து பாடங்களிலும், காலி பணியிடங்கள் இருப்பதாகவும், தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில், காலி பணியிடங்கள், மிகக் குறைவாக இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர், மாவட்டத்திற்குள் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு, 24ம் தேதியும், மாவட்டம் விட்டு, மாவட்டத்தில் பணியிடம் பெறுவதற்கான கலந்தாய்வு, 25ம் தேதியும் நடக்கின்றன. பட்டதாரி:பட்டதாரி ஆசிரியரில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. அறிவியலில், 2,000 இடங்கள், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில், தலா, 3,000 இடங்களும், காலியாக உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், காலி பணியிடங்கள், சுத்தமாக கிடையாது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அதிலும், 8,000 காலி பணியிடங்கள், விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் தான், அதிகளவு உள்ளன. தென் மாவட்டங்களில், மிகக் குறைவு என, கூறப்படுகிறது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 24ல் துவங்கி, 31 வரை நடக்கிறது.
                               3
ம் தேதி பணியில் சேர உத்தரவு:கலந்தாய்வுக்குப் பின், அனைத்து ஆசிரியர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், ஜூன், 3ம் தேதி, பணியில் சேர வேண்டும். பள்ளி திறந்ததற்குப் பின், பணியிட மாறுதல் வழங்கப்படாது. எனவே, பள்ளி திறந்ததற்குப் பின், யாராவது, பணியில் சேராமல் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன
.

No comments:

Post a Comment