Wednesday 29 May 2013

வேளாண் பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி



             வேளாண்மை பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபற்றி அரியலூர் கலெக்டர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டத்தில் 1,06,409 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவாக உள்ளது. இதில், 67
ஆயிரத்து, 155 ஹெக்டேர் மானாவரி பயிர் சாகுபடி பரப்பளவாகவும், 39 ஆயிரத்து, 254 ஹெக்டேர் இறவை சாகுபடி பரப்பளவாகவும் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவான சாகுபடி பரப்பாக நெல் 26 ஆயிரம் ஹெக்டேரிலும், மக்காசோளம் 16 ஆயிரம் ஹெக்டேரிலும், பயிறு வகை பயிர்கள் 3,400 ஹெக்டேரிலும், கடலை 11 ஆயிரம் ஹெக்டேரிலும், பருத்தி 8 ஆயிரம் ஹெக்டேரிலும், எள் 2 ஆயிரம் ஹெக்டேரிலும், முந்திரி 27 ஆயிரத்து, 500 ஹெக்டேரிலும், கரும்பு 8 ஆயிரம் ஹெக்டேரிலும், மிளகாய் 500 ஹெக்டேரிலும், மரவள்ளி 400 ஹெக்டேரிலும், புளி 293 ஹெக்டேரிலும், மா 490 ஹெக்டேரிலும், கத்திரி 170 ஹெக்டேரிலும், வாழை 201 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
                             
அரியலூர் மாவட்டத்தில் வேளாண் மற்றும் அதை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது. வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், பதப்படுத்துதல், தரம் பிரித்தல் மற்றும் துணை பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களை இம்மாவட்டத்தில் தொடங்குவதன் மூலம், வேலை வாய்ப்பு மற்றும் வேளாண்மையில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ப்ளஸ் 2 அளவில் விவசாயம் தொடர்பான பாடம் படித்தவர்கள், விவசாய பட்டதாரிகள், விவசாய பட்டயம் பெற்றவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான கால்நடைத்துறை, மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் பால்வளத்துறை முதலியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களை, விவசாய தொழிலில் முன்னோடியாக்க, மூன்று மாத பயிற்சியுடன் தங்கும் வசதியும் இலவசமாக, சென்னையில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண் நிலையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
                     
ஆர்வமுள்ளவர்கள் இயக்குநர், நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம், ஒருங்கிணைந்த பயிற்சி நிலையம், 2,377-, அண்ணா நகர், சென்னை-40. ஃபோன்: 044-26210423, 26211423 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். பயிற்சிக்கான விண்ணப்பங்களை மேற்கண்ட பயிற்சி மையத்தில் நேரடியாகவோ அல்லது பயிற்சி மையத்தின் இணைய தளம் வழியாகவோ, தர பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment