Thursday 9 May 2013

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?



              பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து, இன்று வெளியாகவுள்ள தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி மாணவர்கள் காத்திருப்பீர்கள். தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில்
சேர்வதற்கு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங்கான விண்ணப்பங்கள் கடந்த மே 4 முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்ஜினியரிங் துறையில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. இதில் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பெரிய குழப்பமே இருக்கும். மாணவர்கள் , பெற்றோர்கள் அமர்ந்து பேசிமுடிவெடுக்க வேண்டும். ஆசிரியர்கள், கல்வியாளர்கள்நண்பர்கள் ஆகியவற்றின் கருத்துகளையும் ஆராய்ந்து எந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.
                             
எப்படி தேர்வு செய்வதுகவுன்சிலிங் நடைமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். அதே போல, கல்லூரி மற்றும் படிப்பை எப்படி தேர்வு  செய்யலாம் என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை அண்ணா பல்கலை நடத்தும் கவுன்சிலிங் மூலம் நடைபெறுகிறது. நாம் எடுத்த மதிப்பெண்ணை வைத்து  எந்த கல்லூரியில் எந்த பிரிவை எடுக்கலாம் என்பதை, கடந்த ஆண்டு, இதே கட்ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடத்தை வைத்து முடிவு செய்யலாம்.
                           
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள Minimum Cutoff 2013 என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதில் மாவட்டம் வாரியாக ஒவ்வொரு கல்லூரியிலும் சென்ற ஆண்டு எந்த படிப்புக்கு எந்த கட் ஆஃப் மார்க் கேட்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், இது உத்தேசமானதுதான். சில நேரங்களில் கடந்த ஆண்டு அதே மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம் இப்போது கிடைக்காமல் போகலாம். கிடைக்கவும் செய்யலாம். கட்ஆப் மதிப்பெண் 1 மார்க் கூடலாம்/ குறையலாம். உதாரணத்துகு கடந்தாண்டு 191 கட் ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம், இந்தாண்டு 190  அல்லது 192 கட் ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைக்கும்.
                           
பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து, டாப் 1015 கல்லூரிகளை தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 180 கட்ஆப் எடுத்த மாணவர் 177 முதல் 183 வரை கட்ஆப் வரை கிடைத்த கல்லூரியிலிருந்து தேர்வு செய்து கொள்வது நல்லது.
பார்வை பலவிதம்
               
ஒவ்வொருவர் பார்வையிலும் கல்லூரியைப் பற்றிய மதிப்பீடு மாறுபடும். சிலர் நல்ல கல்லூரியில் எந்த பிரிவு கிடைத்தாலும் படிக்கிறார்கள். சிலர் நல்ல பிரிவு எந்த கல்லூரியில் கிடைத்தாலும் படிக்கிறார்கள். இந்த இரண்டுமே சரியான முடிவுதான். அது அவர்களது விருப்பம். சில பெற்றோர்கள், கல்லூரியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால்தான் படிப்பார்கள் என்று நினைப்பார்கள். சில மாணவர்கள் சுதந்திரம் கொடுத்தால்தான் படிப்பார்கள் என்று நினைப்பார்கள். அதைப் பொறுத்துதான் அவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். வீட்டிலிருந்து சென்று படிக்க வேண்டுமா. விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும்.
நேரடியாக செல்லுங்கள்
                            
கல்லூரியை பற்றி தெரிந்து கொள்வதற்கு அக்கல்லூரிக்கு நேரடியாக செல்லுங்கள், அங்கு படிக்கும் முன்னாள் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் தரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், பேருந்து வசதி, விடுதி வசதி, நூலகம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டு சேர்த்துவிட்டு பின் வருத்தப்படுவதில் நியாயமில்லை. கவுன்சிலிங்கின் போது, அந்த கல்லூரிகளுக்குள், காலியாக உள்ள இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து தேர்வு செய்வது எளிதாக இருக்கும்
.

No comments:

Post a Comment