Monday 24 June 2013

ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லாவிட்டால் “கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


                          ‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
                தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா
கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ராவணன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:– வருகிற 30.6.2013 அன்று நான், ஓய்வு பெற உள்ளேன். கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியரை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, இந்த கல்வி ஆண்டின்(2013–2014) இறுதி வரை பணியாற்ற என்னை அனுமதிக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர் தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் கேட்டார். ஆனால், ஒப்புதல் கோரிய மனு மீது முதன்மை கல்வி அதிகாரி எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, உரிய உத்தரவு பிறப்பிக்க முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
 நடவடிக்கை மேற்கொள்வது இல்லை
              இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் மட்டுமே இதுபோன்ற பிரச்சினை இருக்கிறது. அரசின் விதி இருக்கும் போது அதை செயல்படுத்த தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது இல்லை. இதுபோன்ற ஒரு வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதுஎன்றார்.
அனுமதி மறுக்கக்கூடாது

                மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:– ‘‘மனுதாரர் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாக இருப்பதற்கான மருத்துவ சான்றிதழை, கல்வி அதிகாரிக்கு தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்துள்ளார். குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதி மறுக்கக்கூடாது. எனவே, மனுதாரர் இந்த கல்வி ஆண்டின்(2013–2014) இறுதி வரை பணியாற்ற தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்க வேண்டும்.’’ இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment