Friday 26 July 2013

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி: தமிழகம் தேர்வு


             அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தலைமை பண்புடன் செயல்படுவதற்காக, தேசிய அளவிலான "லீடர்ஷிப் புரோகிராம்" இங்கிலாந்து பேராசிரியர்கள் உதவியுடன்
வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கு, இந்தியளவில் தமிழகம் மற்றும் ராஜஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். ஒரு பள்ளி சிறந்து விளங்க தலைமை ஆசிரியரின் பங்கு முக்கியமானது. தலைமை ஆசிரியர், தலைமை பண்பு குறித்து நன்கு அறிந்து, சிறப்பாக செயல்பட்டால், அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புண்டு. இதன் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இதற்காக தேசிய அளவில் தலைமை ஆசிரியர்களுக்கு, "லீடர்ஷிப் புரோகிராம்" நடத்த திட்டமிட்டுள்ளனர்.
                               முதற்கட்டமாக, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலைக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் மற்றும், பல துறைகளில் உள்ள நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம், ஒரு தலைமை ஆசிரியர், தலைமை பண்புடன், எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து, வடிவமைக்க உள்ளனர். இதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இந்தியாவில் முதலில் தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசார்த்தமான பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர்.

                        இரண்டு மாநிலங்களிலும் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும் இந்தபயிற்சியை துவக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடந்தது. எங்களது கருத்துக்களின் அடிப்படையில், பயிற்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.

No comments:

Post a Comment