Monday 23 September 2013

மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.: அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வருமா?


            தனியார் பள்ளி கல்லூரிகளில், மாணவர் பற்றிய முழு விபரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க, உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடைமுறையை அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றினால், தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்பு ஏற்படும்.
புதுச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், மாணவர்கள் பற்றிய முழு விபரம் பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையிலும், மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் நடைமுறையை பின்பற்றுகின்றன. தேர்வு பற்றிய விபரங்கள், மாதாந்திர தேர்வு கால அட்டவணை, தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பள்ளிக்கு லேட்டாக வருவது, விடுப்பு எடுப்பது, ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, வீட்டு பாடம், மாணவர்களின் தகுதி நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படுகிறது.
                மாணவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் பெற்றோருக்கு தெரிந்துவிடுவதால், தங்களுடைய பிள்ளைகளின் படிப்பு நிலையை தெரிந்து கொண்டு, அவர்களை வழிநடத்த ஏதுவாக அமைகிறது. இதுபற்றி தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.எம்.எஸ்., தகவல்களை மாணவர்களுக்கு அனுப்பி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் மாதத்திற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர் பற்றிய தகவல்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும்" என்று தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விபரங்கள் பெற்றோர்க்கு தெரியாமல் போய்விடுவதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் ஆண்டுக்காண்டு சரிந்து வருகிறது.

                      கடந்த மே மாதம் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 118 பள்ளிகள் நூறு சதவீதம் பெற்றன. இதில் 10 அரசு பள்ளிகள் மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற முடிந்தது. எனவே, அரசுப்பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் உள்ள மிகுந்த இடைவெளியை சரி செய்ய, தனியார் பள்ளி நடைமுறைகளை ஓரளவாவது பின்பற்ற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசை பொறுத்தவரை கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதியை செலவு செய்கிறது. தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பும் முறையை, வருங்காலங்களில் அரசு பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்தினால் மாணவர்களின் கல்வித்தரமும் தேர்ச்சி சதவீதமும் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment